Home Video மண்ணின் குரல்: மார்ச் 2016: மனித உரிமை போராளி பேராசிரியர்.பிரபா.கல்யாணி

மண்ணின் குரல்: மார்ச் 2016: மனித உரிமை போராளி பேராசிரியர்.பிரபா.கல்யாணி

by admin
0 comment
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
தமிழகத்தில் இருக்கும் பூர்வீகப் பழங்குடி மக்களில் முப்பத்தாறு பிரிவுகளில் இருளர்​ சமூகத்தினர் ஒரு பிரிவினர்.   தமிழக மக்கள் தொகை எண்ணிக்கையில் இவர்கள் 1% என்ற நிலையில்,  கல்வி மற்றும்  சமூக ரீதியில் விளிம்பு நிலையில் உள்ள நிலையில் இவர்கள் இருக்கின்றனர். அருகாமையில் இருக்கும் செங்கல் சூலை, அரிசி ஆலைகளில் கொத்தடிமை முறையில் பணி என்ற வகையிலேயே இவர்கள் வாழ்வாதாரம் அமைந்திருக்கின்றது. இவர்கள் தமிழகத்தின் வட தமிழ்நாட்டுப் பகுதியில் மட்டுமே இருக்கும் ஒரு குடியினர்.  இந்த இருளர் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபடும் சமூக ஆர்வலர் பேராசிரியர் பிரபா.கல்யாணி அவர்களது விழியப் பதிவே இன்று வெளியீடு காண்கின்றது.

பேராசிரியர் பிரபா.கல்விமணி (69) கல்வியாளர், சமூக ஆர்வலர், மனித உரிமைப் போராளி எனப் பல்வேறு பரிமாணங்களை உடையவர். 1947 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், செளந்திரபாண்டியபுரம் கிராமத்தில் பாலையா-பிரமு என்கிற ஏழை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.
தமது பட்டப்படிப்பை முடித்து 1967 கும்பகோணத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில்  பணியாற்றி பின்னர் 1978 விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் சேர்ந்து, பிறகு 1981 திண்டிவனம் அரசுக் கல்லூரிக்குச் சென்றார். முழுநேரப் பொது  வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 1996 இல் தமது பேராசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பழங்குடி இருளர் பெண் அத்தியூர் விஜயா புதுச்சேரி காவல்துறையினர் 6 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், விஜயாவிற்காக வழக்கு நடத்துவதற்காக செயல்படத்தொடங்கி ‘’பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள இருளர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அடையாளமாக திகழ்கின்றார். 

தாய்மொழி வழியான தமிழ் வழிக் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் திண்டிவனம் ரோசனையில் தாய்த் தமிழ் பள்ளியினைத் தொடங்கி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமான கல்வி, மதிய உணவு அளித்துவருகின்றார். 
தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் மனித உரிமை, தமிழ் வழிக் கல்வி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயலாக்கம், கல்விச் சீர்கேடுகள், அரசின் தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள், மத நல்லிணக்கம், ஏரிகுளம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகையிலான சமூக நோக்கிலான மாநாடுகளைப் பலரையும் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். 

1986 ஆம் ஆண்டு நகர கல்வி மேம்பாட்டுக் குழு அமைப்பினைத் தொடங்கி நகரில் உள்ள பல்வேறு பிரபலங்களையும் இணைத்து அரசு பள்ளியே இல்லாத திண்டிவனம் நகரின் முருங்கப்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளி கொண்டுவந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம் நகரில் நடைபெற்ற தனிப்பயிற்சி மோசடிகளுக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தியவர் இவர். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழிப்போம் என்ற பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்து சில ஆண்டுகள் காப்பி அடிப்பதை அரசு தடுப்பதற்கான செயல்களை முன்னெடுத்தவர்.இதன் காரணமாக பலமுறை இவர் பணியிட மாறுதலுக்கு உள்ளிட நேர்ந்தது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தனக்கான நீதியினைப் பெற்று தொடர்ந்து திண்டிவனத்திலேயே பணியாற்றியவர்,
இறுதியில் முழுநேரமாக சமூகச் செயல்பாட்டில் ஈடுபட 1996 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து 1997 இல் விருப்ப ஓய்வினையும் பெற்றார். 

2000 ஆம் ஆண்டு வீரப்பன் பிடியிலிருந்த கன்னட திரைப்படநடிகர் ராஜ்குமாரை மீட்க அமைக்கப்பட்ட மீட்பு குழுவில் ஒருவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர் இவர். 

கல்வி மேம்பாடு, இருளர் இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார். பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். 
ஏறக்குறைய 30 நிமிட  பேட்டி இது.
விழியப் பதிவைக் காண:http://video-thf.blogspot.de/2016/03/blog-post_18.html
யூடியூபில் காண:     http://video-thf.blogspot.de/2016/03/blog-post_18.html
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
குறிப்பு: தகவல் குறிப்புக்களை வழங்கிய திண்டிவனம் திரு.முருகப்பன், திரு.ராஜேஷ் ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​


You may also like

Leave a Comment