Home பல்வேறு தமிழின் தலையெழுத்து

தமிழின் தலையெழுத்து

by admin
2 comments

முனைவர் மா. இராசேந்திரன், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

**************************************************************

தமிழின் தலையெழுத்து, பெருமையும், வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல, தலையெழுத்தைத், தொடக்க கால எழுத்து என்றும், பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு, பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து, மொழியாகும். எழுத்து என்றால், ஒலி எழுத்து என்றும், வரி எழுத்து என்றும், இரண்டையும் குறிக்கும். எழுப்பப் படுவதாலும், எழுதப் படுவதாலும், இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து, பிறகு, வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே, தமிழுக்கு, எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும் கூட, எழுத்தில்லா மொழிகள், பல உள்ளன. பாரசீக மன்னன் டரையஸ் என்பவனுக்கு, சிந்தியர்கள், ஒரு தூது அனுப்பியதாக, கிரேக்க வரலாற்றாசிரியர், ஹராடோட்டஸ் குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால், இறந்து விடுவாய், என்பதே, தூதின் செய்தி. தவளை, தண்ணீருக்குள் அஞ்சி மறைவது போலவும், எலி, வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால், அம்புகளால் நீ கொல்லப் படுவாய், என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம், தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத் தனுப்பினார்கள். அது, எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர், மெய்யெழுத்துக்களும், எ, ஓ குறிகளும், புள்ளிபெறும், என்று, வரிவடிவ எழுத்துக்களைப் பற்றி, நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துக்கள் என்று, உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும், வரலாறும், அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து, உரு எழுத்து என்றும், எண்ணத்தை வெளிப்படுத்துவது, கரு எழுத்து என்றும், ஓசையைக் காட்டுவது, ஒலி எழுத்து என்றும், உணர்வை வெளிப்படுத்துவது, உணர்வெழுத்தென்றும், தமிழில், பல்வேறு எழுத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள், இந்தியாவில் கண்டறியப்பட்ட, தொன்மையான எழுத்துக்களாகும். எல்லோரும் ஏற்கத்தக்க வகையில், இதுவரை, யாரும், இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்து வெளிக்குப் பின் கிடைப்பவை, குறியீடுகள். குறியீடுகளையும், படித்தறிய முடியவில்லை. ஆனால், சிந்துவெளி எழுத்துக்களும் குறியீடுகளும், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல் வெட்டுக்கள், நாணயங்கள், என்று, மக்கள் வாழ்க்கையோடு கலந்து, இடம் பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துக்கள், குறியீடுகளுக்குப், பிறகு வந்தவை பிராமி எழுத்துக்கள். தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும், பொதுவாகவும், தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு, வர்க்க எழுத்துக்களைக் கூடுதலாகவும் கொண்டு, பிராமி எழுத்துக்கள் உள்ளன.

அப்படியென்றால், இந்தியாவில் மட்டுமின்றி, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும், மொழிகள், வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும், பொதுவாக, ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துக்களுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல் வெட்டுக்களால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில், தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல் வெட்டுக்களில், குஜராத் மாநிலம், கிர்நார் 16ஆம் பாறைக் கல் வெட்டில், சேர சோழ பாண்டியர்களும், சத்திய புத்ரராகிய அதியமான் மரபினரும், குறிப்பிடப் பட்டுள்ளனர். தமிழ் நாட்டில், மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள், அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை, என்று, தொல்லியல் அறிஞர்கள், பேராசிரியர் முனைவர் கா. ராஜனும், முனைவர் தூ. இராஜவேலும், கருதுகின்றனர்.

ஹத்திபடாவிலும் (Hathibada), அயோத்தியாவிலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமஸ்கிருத கல்வெட்டுக்கள், கிடைத்துள்ளன. அசோகன் கல் வெட்டுக்களில், பிராக்கிருத மொழிக் கல் வெட்டுக்கள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில், தமிழ்க் கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துக்கள் தவிர) அமைந்துள்ளமை, குறிப்பிடத் தக்கதாகும்.

புத்த மத நூலான லலித விஸ்தாரத்திலும், சமண நூலான பன்னவன கதாவிலும், “பிராமி” குறிப்பிடப் படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர், புத்தர் என்றும், சமண சமய தீர்த்தங்கரர் ரிஷபதேவர் மகள், பிராதமி பெயரில் உருவாக்கப் பட்டதென்றும், பிரம்மா படைத்ததென்றும், பிராமி பற்றிய சமயக் கதைகள், பல உள்ளன.

அசோகன் கல் வெட்டில் இடம் பெற்றதால், பிராமி என்று அழைக்கப் படுகிறது. மொழியின் பெயரில், எழுத்து அமைக்கப் படுவதே, மரபு. அசோகன் என்பதோ, பிராமி என்பதோ, மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும், பிராமியை, உடைமையாக்கிவிடக்கூடாது என்பதால், பயன்படுத்தியவர் பெயரில், அசோகன் பிராமி, என்று அழைக்கப் பட்டிருக்கலாம். அதிலும், தமிழ் மொழிக்கான பிராமியைத், தென்பிராமி என்றும், தமிழ் பிராமி என்றும், தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியமும், சங்க இலக்கியப் பாடல்களும், தமிழில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும், என்று பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள், பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண் வட்டிலிலும், இடம் பெற்றுள்ளமையைத், தொல்லியல் அறிஞர், ஐராவதம் மகாதேவன் அவர்கள், உறுதிப் படுத்தியுள்ளார். சிந்து வெளி எழுத்துக்களின் காலம், குறைந்தது, கி.மு. 1500 எனக் கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துக்களுக்கும், பிராமி எழுத்துக்களுக்கும், இடைப்பட்ட குறியீடுகள், இந்தியாவின் தமிழகத்தில்தான், குறிப்பாக, சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ஊர்களில்தான், அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி, இந்திய மொழிகளுக்கான எழுத்துக்களின் தாய், என்று, ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்திய மலைப் பகுதி நீங்கலாக), திராவிட இன மொழிகளே பேசப்பட்டன, என்று, பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்காரும் (Stone age in India), பேராசிரியர் டி.ஆர். சேஷ ஐயங்காரும் (Dravidian India), திராவிட மொழி, தென்னிந்திய மொழி மட்டுமன்று, காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று, அறிஞர் அம்பேத்கரும் (The untouchables), கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ள குறியீடுகளை, அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்களோடு, இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் “இணைப்புக் கண்ணிகள்” கிடைக்குமாயின், தமிழின் தலையெழுத்துத் தீர்மானமாகிவிடும்.

இப்படத்தில் உள்ள தமிழ் இலக்கியம் எது? தெரிந்து கொள்ள சொடுக்குக!

தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றிய மேல்விவரங்கள் அறிய…
தமிழ் மரபு அறக்கட்டளைப் பக்கங்கள்!

You may also like

2 comments

சுப.நற்குணன் March 7, 2010 - 7:45 am

மிகவும் பயன்மிகு இடுகை. தமிழ் எழுத்தின் வரலாறு பற்றிய அரிய செய்திகள்.

Reply
கோவி.கண்ணன் March 7, 2010 - 7:45 am

//இப்படத்தில் உள்ள தமிழ் இலக்கியம் எது? தெரிந்து கொள்ள//

மேல 4 + கிழே 3 இருப்பதைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது !
🙂

Reply

Leave a Comment