Home பல்வேறு தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்

by admin
0 comment

வணக்கம்.
2013ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தமிழ் மரபு அறக்கட்டளை தயாராகிவிட்டது. 
நமது குழுமத்தின் நண்பர்கள் சிலர் இணைந்து சில சிறப்பு வெளியீடுகளைத் தயாரித்திருக்கின்றோம். தமிழர் மரபின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் இப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்கின்றோம்.
1. திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயக் குடைவரைக் கோயில், பாறை ஓவியங்கள், சமணப்படுகைகள் – சுபா
எனது இவ்வாண்டு (2012) ஜனவரி மாத சிவகங்கை மாவட்டத்துக்கானப் பயணத்தின் போது பதிவாக்கப்பட்ட 4 வீடியோ விழியப் பதிவுகளைப்புத்தாண்டு படைப்பாக இங்கே வெளியிடுகின்றேன். (பயண ஏற்பாட்டுக்கும் விளக்கத்திற்கும் நன்றி: டாக்டர். காளைராசன். டாக்டர்.வள்ளி)
சில படங்களை டாக்டர்.காளைராசனின் பதிவில் இங்கே காணலாம்.
முதல் விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_31.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=daofS7feDgo&feature=youtu.be
திருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது. 
இந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் இடம் இப்பகுதி.  இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன்.  இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. 
இரண்டாவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_6567.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=GDc64xb0oos&feature=youtu.be
இந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலாம்.  இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது. 
இச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
மூன்றாவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html

மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.  
இப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை. 
மலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன.  இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.
நான்காவது விழியம்: http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html
யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=5qUODMjoeNo&feature=youtu.be

திருமலை பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு புறப்படும் சமயத்தில் அங்கிருந்த மக்களே எங்களை அழைத்து மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கே சில ஓவியங்கள் இருப்பதாகவும் கூற அங்கே நடந்தோம். அங்கே பதிவாக்கப்பட்ட 2 நிமிட விழியப் பதிவு இது.
2. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்….. நாமும் – துரை.ந.உ
உழுது , விதைத்து , நீர்பாய்ச்சி, களையெடுத்து , தளிர் நிறுத்தி, தடவித் தடவி வளர்த்து, பூப்பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு காயாகப் வலிக்காமல் பறித்து , தடவித் தடவிக் கூடையில் அடுக்கி, மெதுவாக வரப்பில் இறக்கி , ஒன்றாகச் சேர்த்து, உழைப்பின் பலன்பெற …பெருமையுடன் காத்திருந்து , கடைசியில் ஏமாந்த  அந்த தாத்தாவின் அன்றைய சுருங்கிய முகம் இப்போது மனதுக்குள் வந்து நிழலாட…
முழுதும் வாசிக்க இங்கே செல்க…! http://image-thf.blogspot.com


3. மார்கழியும் திருவேங்கடத்தானும் – திவாகர்

எது எப்படியானாலும் திருமலையில் மூலவராய்க் கோயில் கொண்ட அந்த திருவேங்கடவன் மட்டும் தான் எப்படி ஆதியில் இருந்தானோ அப்படியேதான் இன்றும் இருந்து கொண்டு தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். சாதாரண மாதங்களில் அவனுக்கு செய்யும் பூசையில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மார்கழியில் அவன் தோற்றம் ஏதோ புதிய பொலிவுடன் இருப்பது போலத் தெரியும்.
முழுதும் வாசிக்க இங்கே செல்க..!



4.இழையெடுத்தல் – டாக்டர் வள்ளி
தமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர். இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“. இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.
முழுதும் வாசிக்க இங்கே செல்க.! 
இழையெடுத்தல் எனும் இச்சடங்கை மிக விரிவாக டாக்டர் வள்ளி விளக்கும் ஒலிப்பதிவைக் கேட்க மண்ணின் குரலுக்குச் செல்க.!
5.கொங்கு நாட்டு மகளிருக்கானச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் – பவள சங்கரி
பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.
முழுதாக வாசிக்க இங்கே செல்க..!


6. அர்த்தனாரி தத்துவம் – தமிழ்த்தேனீ
“திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள். இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .
முழுதும் வாசிக்க இங்கே செல்க.! 
7. தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே – கீதா சாம்பசிவம்
தில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.
முழுதும் வாசிக்க இங்கே செல்க.!
8. திருப்பூவணத்தல மகாத்மியம் – டாக்டர்.காளைராசன்
முழுதும் வாசிக்க இங்கே செல்க.!


9. மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி – கதிர், ஈரோடு.
சாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
முழுதும் வாசிக்க இங்கே செல்க!


10. ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல் – டாக்டர்.காளைராசன்
இந்த நூல் 01.01.2013 முதல் தினம் ஒரு பக்கமாக மின்தமிழில் வெளியிடப்படும். தனி இழையில் இந்த நூல் தொடங்கும்.
புத்தாண்டு வெளியீடுகளை வாசித்தும், கண்டும், கேட்டும் நீங்கள் மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
மின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை – மின்தமிழ் மடலாடற் குழுவின் இனிய 2013ம் ஆண்டு புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment