இந்த சூரைமாநகர் புராணத்தை எழுதிடப் பொருளுதவி வழங்கிய இலக்குமணச் செட்டியாரது வம்சாவழியினர் காரைக்குடியில் எண்.7 லெட்சுமணன் செட்டியார் வீதியில் வசித்து வரும் (கி.சொக்கலிங்கம் செட்டியாரின் மனைவி) முனைவர்.வள்ளி அவர்கள்.
முனைவர் நா.வள்ளி அவர்களது வழிகாட்டுதலின்படி இந்நூல் இவரது ஆய்வுமாணவரான அழகப்பா பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் முனைவர்.கி.காளைராசன் அவர்களால் தட்டச்சு செய்யப்பெற்று இணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
புராணம் எழுதிய வரலாறு
பிள்ளையார்பட்டிக் கோயில் காரைக்குடி முருகப்பச் செட்டியார் மகன் லெட்சுமணன் செட்டியாருக்குப் பிள்ளை வந்தவர் வேகுபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் செட்டியார்.
முரு.லெட்சுமணன் செட்டியாருக்குக் கிருஷ்ணன் செட்டியார் பிள்ளை வந்ததை (தத்து எடுத்ததை) ஒரு ஓலைச்சுவடியில் எழுதிப் பதிவு செய்துள்ளனர். இந்த ஓலைச் சுவடி ‘ஆவணம்‘ இதழில் பதிவாகியுள்ளது. பிள்ளை வந்த முரு.லெ.கிருஷ்ணன் செட்டியார் அவர்கள்சிவகங்கை சமஸ்தானத்திலிருந்து சூரையூர் கோயிலை 99 வருடங்களுக்கு ஒப்பந்தமாகப் பெற்று திருப்பணிகள் செய்தார். சூரையூர் சூரைமாநகர் என்றானது. சூரைமாநகர் கோயிலில் தனது தந்தையின் சிலாவுருவத்தையும் தாயார் லெட்சுமி ஆச்சி அவர்களது சிலா உருவத்தையும் வைத்துள்ளார். கோயில் திருப்பணிகள் எல்லாவற்றையும் செவ்வனே முடித்து கும்பஅபிஷேகம் நடத்தியுள்ளார்.இக்கோயிலுக்கு அருகில் உள்ள கண்மாய்க்குக் கிருஷ்ணன் செட்டியார் கண்மாய் என்ற பெயர் இன்றும் உள்ளது.
இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அழைத்து வந்து சூரைமாநகர்ப் புராணத்தைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார். இவரது வேண்டுகோளை ஏற்று மகாவித்வான் அவர்கள் சூரைமாநகர்புராணம் பாடினார். ஒரு பாடலுக்கு ஒருபணம் வீதம் பிள்ளையவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார் கிருஷ்ணன் செட்டியார். அவர் சிறந்த அறப்பணிகளை நிறையச் செய்துள்ளார் என்று இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி பிரிட்டீஸ் விக்டோரியா மகாராணியார் 1877ஆம் ஆண்டு ஒரு பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளார். இவரது கொடைத்தன்மையைப் பாராட்டி நாட்டுப் புறப் பாடல் ஒன்றும் உள்ளது.காரைக்குடியில் லெட்சுமணன் செட்டியார் பெயரில் ஒரு வீதி உள்ளது.