Home Video மண்ணின் குரல்: மார்ச் 2017: தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

மண்ணின் குரல்: மார்ச் 2017: தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

by admin
0 comment
வணக்கம்.
மதுரை மாநகரில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருப்போம். அங்கே தென்பரங்குன்றம் என ஒரு பகுதியும் உள்ளது. திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் இந்தத் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையின் சமணர் குடை வரை கோவில் ஒன்று உள்ளது. தற்போது உமையாண்டார் கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.  இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குக் கீழே உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே மரங்களின் கீழ் வராகி, நாகர், முனியாண்டி சாமி என நாட்டார் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்டைய பாரம்பரியத்தின் வழிபாட்டுக் கூரான குலதெய்வ வழிபாடு என்பது இப்பகுதியில் சிறப்புப் பெற்றுள்ளது. இங்கே மூலைக்கு மூலை அமைந்திருக்கும் சிலைகளை மக்கள் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 
இங்குள்ள குடைவரைக் கோயிலில் பாதுகாவலராக இருக்கும் பெரியவர் ஒருவர் என் உடன் வந்து இந்தக் குலதெய்வ சாமிகள் இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும்  விளக்கம் அளித்தார். இதே பகுதியில் சற்றே உயரமான ஒரு குன்று பகுதியில் சப்த கன்னிமார்  கோயில் அமைந்துள்ளது. இங்கே கருப்புசாமி, விநாயகர், நாகம்மா ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. 
அருகிலேயே  ஒரு சிறு கூடாரத்திற்குள் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.  சிவலிங்கத்திற்குப் பால் சுனை கண்ட சிவபெருமான் என்பது பெயர். இங்கு பஞ்சலிங்க சன்னிதி ஒன்றும் அமைந்திருக்கின்றது.
இந்தப் பகுதி அழகிய வனம் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாடு இன்றும் மிகச்சிறப்புடன் நடத்தப்படுகின்ற ஒரு பகுதியாக இது திகழ்கின்றது.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_18.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=iBpJhzgYVMc&feature=youtu.be
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​



You may also like

Leave a Comment