THF Announcement: E-books update: 31/1/2019 *மனுமுறைகண்ட வாசகம்-மனுச் சோழன்
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் …
இன்று “மனுமுறைகண்ட வாசகம்-மனுச் சோழன்” என்ற திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிய
நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது.
நூல் குறிப்பு:
நூல்: மனுமுறைகண்ட வாசகம், மனுச் சோழன்
ஆசிரியர்: வள்ளலார் திரு அருட்பிரகாச இராமலிங்க அடிகளார்
முதல் பதிப்பு: 1854 ஜூன் – சென்னை சாஸ்திர விளக்க சங்கம்
மின்னூல் பதிப்பு: 2019 ஜனவரி – தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் பதிப்பு.
திருவருட்பா மூலம் தமிழ்மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற திரு அருட்பிரகாச வள்ளலார் – வடலூர் இராமலிங்க அடிகளார் (1823 – 1874) அருளிய உரைநடை நூல்கள் இரண்டு. அவை “ஜீவகாருண்ய ஒழுக்கம்” மற்றும் “மனுமுறைகண்ட வாசகம்” ஆகியவையாகும். இரு நூல்களுமே வள்ளலார் தாம் போதித்த கொல்லாநெறியை வலியுறுத்தும் நோக்கில் எழுதியவை. ஜீவகாருண்ய ஒழுக்கம் நூல் மக்களைச் சென்றடைந்த அளவில் மனுமுறைகண்ட வாசகம் மக்களிடம் சென்று சேரவில்லை எனலாம்.
உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துமே சமம், அவற்றின் இடையே பேதமில்லை என்ற கொள்கையை வலியுறுத்த வள்ளலார் எடுத்தாண்ட அடிப்படைக்கதை சேக்கிழாரின் பெரியபுராணத்தில் வரும் மனுநீதிச்சோழனின் கதை. பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டி ஆளுக்கொருநீதி என்ற மனுநீதியின் அடிப்படையைச் சாடும் வகையில் ‘எவ்வுயிர்களிடத்தும் கொலைப் பாதகத்தை சமமாகக் கொள்ளவேண்டும்’ என்ற கருத்திற்கு ஏற்ப வள்ளலார் மனுநீதிச் சோழன் கதையைக் கையாண்டது சிறப்பிற்குரிய ஒரு மாற்றுக் கோணம் என்பதில் ஐயமில்லை.
சென்னை சாஸ்திர விளக்க சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி வள்ளலார் தமது முப்பதாம் அகவை காலத்தில் இயற்றிய இந்த நூல், அச் சங்கத்தால் 1854 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இலக்கிய நயமிக்க நீண்ட சொற்றொடர்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.
தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தார் குறிப்பு:
வைதீக சாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும், பிறப்பின் அடிப்படையில் உயிர்களில் வேற்றுமை கூறும் மனுதர்மம் என்ற நூலுக்கும் வள்ளலார் காட்டும் மனுநீதி சோழனுக்கும் தொடர்பு இருக்குமா என்ற ஐயம் சிலருக்கு எழலாம். மனு என்ற சொல் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், எல்லா உயிர்களும் ஒன்றே என்ற கொள்கையை வலியுறுத்துவதே வள்ளலார் அருளிய மனுநீதிச்சோழனின் வரலாறு என்பதைக் காண்க. சோழனின் பெயருக்கும் வைதீக மனுதர்ம சாத்திரத்திற்கும் தொடர்பில்லை!
மின்னாக்க அனுமதி மற்றும் உதவி: vallalar.org
மின்னூலாக்க உதவி: முனைவர் தேமொழி
நூலை வாசிக்க ://www.tamilheritage.org/old/text/ebook/THF-manumuraikanda_Vallalar.pdf
அன்புடன்
தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளை ( www.tamilheritage.org)