அகம் புறம் கண்காட்சியில் திராவிடர் எழுச்சி சிந்தனை வரலாறு
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் கடந்த அக்டோபர் 8, 2022 அன்று தொடங்கப்பட்ட அகம் புறம் தமிழர் வரலாறு, பண்பாடு, மொழி பற்றிய ஆறு மாத கால கண்காட்சியில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த திராவிடர் எழுச்சி நடவடிக்கைகள், தந்தை பெரியார், திராவிடர் கழக முன்னோடிகள் பற்றிய செய்திகள், புகைப்படங்கள், பெரியார் எழுதிய நூல்கள் போன்றவை அடங்கிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சமூகச் சூழலில் சாதிக்கொடுமைகளாலும் தீண்டாமைக் கொடுமைகளாலும் பெண் அடிமைத்தனத்தினாலும், மூடப் பழக்கவழக்கங்களினாலும் கட்டுண்டு கிடந்த சமூக சிந்தனையில் திராவிடக் கழகமும், திரு.ஈ.வெ.ரா பெரியார் அவர்களது தொடர்ச்சியான சமூகச் செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஐரோப்பிய மக்களும் இச்செய்திகளை அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டு வரலாற்றில் திராவிட அமைப்பு ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது என்பதையும், இங்கு ஐரோப்பாவில் வாழும் தமிழ்நாடு மட்டுமன்றி இலங்கையைச் சார்ந்த இரண்டாம் தலைமுறையினரும் இச்செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும், என்பதையும் கவனத்தில் கொண்டு லிண்டன் அருங்காட்சியகம் இப்பகுதியையும் கண்காட்சியில் இணைத்துள்ளது.
முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு