ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டன்பெர்க் மாநிலத்தின் தலைநகரான ஸ்டுட்கார்ட் நகரில் மார்ச் 25, 2023 அன்று அருங்காட்சியக நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியையொட்டி தமிழ்க் கண்காட்சியாக அகம் புறம் ஆறு மாத கால கண்காட்சி நடைபெற்று வரும் ‘லிண்டன் அருங்காட்சியகத்தில்,’ தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால் ‘தமிழ் பாரம்பரிய உடைகளை அயல் நாட்டவர்களுக்கு அணிவிக்க கற்றுக் கொடுக்கும் பயிற்சி’ ஒன்றும் உள்ளூர் ஜெர்மானிய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது.






தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி குழுவினர் இந்த பட்டறையில் அயல் நாட்டவர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டு உடைகளை அணிந்து கொள்வதற்கு உதவியும், தமிழ்நாட்டுத் துணி வகைகளைப் பற்றி அறிமுகம் வழங்கியும் விளக்கம் அளித்தார்கள். ஜெர்மனி குழுவினர் அனைவருக்கும் மற்றும் ஸ்டுட்கார்ட் தமிழ்ச் சங்க சகோதர சகோதரிகளுக்கும் லிண்டன் அருங்காட்சியகத் தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இளைஞர்கள், நடுத்தர வயதினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல தரப்பினரும் இந்தப் பயிற்சியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளவும் தமிழர் பண்பாட்டு உடைகளை அணிந்த மகிழ்வும் வந்தது மகிழ்ச்சி. இத்தகைய நிகழ்ச்சிகளின் வழி தமிழர் வாழ்வியல் கூறுகளை ஐரோப்பியர்களுக்கு எடுத்துச் செல்லும் பணி மகிழ்வானதாகவும் அமைகிறது.
ஏறக்குறைய 100 பேருக்கு மேல் இந்த பயிலரங்குக்கு வந்து தங்கள் ஆர்வத்தைக் காட்டியது பெரு மகிழ்ச்சி அளித்தது. தமிழ் மொழி, பண்பாடு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றை உள்ளூர் ஜெர்மானிய மக்களுக்கும் தகவல் பகிர்ந்து கொள்ள ஸ்டுட்கார்ட் மாநிலத்தில் தமிழ் மக்களுக்கு வாய்ப்பு வழங்கும் இந்த மாநிலத்தின் லிண்டன் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எங்களின் பாராட்டுகளும் நல்வாழ்த்துக்களும்.
முனைவர் க. சுபாஷிணிதலைவர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு,ஜெர்மனி
மார்ச் 25, 2023