தமிழரின் மரபு விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டு
தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
https://youtu.be/z09eU3x0xWs
பலகை ஒன்றில் இரு வரிசைகளில், வரிசை ஒன்றுக்கு ஏழு குழிகள் இருக்கும் பல்லாங்குழி விளையாட்டை சென்ற நூற்றாண்டில் விளையாடாத பள்ளி மாணவர் எவருமே இருந்திருக்க வழியில்லை. இருவர் விளையாடும் இந்த விளையாட்டில் சோழிகளோ அல்லது புளியங்கொட்டைகளோ காய்களாகப் பயன்படுத்தப்பட்டு கோடை விடுமுறையில் சிறுவர்கள் பொழுது போக்காக விளையாடுவார்கள்.
தமிழரின் மரபு விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டு உலகில் பல பகுதிகளிலும் பற்பல பெயர்களில், பல்வேறு விதி முறைகளுடன் விளையாடப்படும். பண்டைக்கால வணிகப் பரவல்கள் இதற்குக் காரணமாக அமையும் என்று கருதப்படுகிறது.
ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? எனும் விடுகதைக்கு விடை: பல்லாங்குழி.
எந்தக் குழிக் காய்களை எடுத்து விளையாடினால் ஆட்டத்தில் வெல்லலாம், முத்து, பாண்டி, புதையல் எல்லாம் கிடைக்கும் என்று பலவகைகளில் மனக்கணக்கு போடும் வழக்கம் பயிற்சியில் தானே வந்துவிடும்.
“எண்ணிக்கை, மனக்கணக்கு பயிற்சி”
“இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்தில் செல்வத்தைச் சரியாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும்”
“வாழ்வில் வெற்றியையும் தோல்வியையும் எதிர்கொள்வது, விளையாட்டை விளையாட்டாக மட்டும் பழக்கப் படுத்திக் கொள்வது”
போன்ற பண்புகளை விளையாட்டாகவே சிறுவயதில் வளரும் பருவத்தினருக்குப் பயிற்சியளிக்கப் பல்லாங்குழி விளையாட்டு உதவும்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் முனைவர் பாப்பா அவர்களும், ப்ரீத்தி அவர்களும் பல்லாங்குழியில் ‘கல்யாணப் பாண்டி’ அல்லது ‘குலுக்குப் பாண்டி’ என்ற வகை விளையாட்டை விளையாடுகிறார்கள். திருமணநாள் மாலை நலுங்கு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் விளையாடும் ஒரு பல்லாங்குழி விளையாட்டு முறையை விளக்குகிறார் கற்றுத் தரும் முனைவர் பாப்பா.